Monday, February 9, 2015

’ஸ்டார்ட் கட் கத்தரிக்காய்... ஸ்டார்ட் கட் வெண்டைக்காய்’


‘இனி யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம்
என்ன செய்கிறாய் என்று...
எனக்கொரு வேலை கிடைத்துவிட்டது’ 

இந்த அர்த்தம் தொனிக்க நீண்ட காலத்துக்கு முன்பு வண்ணதாசன்[?] ஒரு கவிதை எழுதியிருப்பார்.

இப்படிப்பட்ட கேள்விகளை, விசாரிப்புகளை நண்பர்களிடமிருந்து, நலம் விரும்பிகளிடமிருந்து, தெரிந்தவர்களிடமிருந்து, அன்றுதான் அறிந்தவர்களிடமிருந்து என்று பலமுனைகளில் வாழ்நாள் முழுக்க எதிர்கொண்டே ஆகவேண்டும்.கோப்பைகளுக்கு அடுத்தபடியாக  கேள்விகளால் நிரம்பியது வாழ்க்கை.’ஏன் என்று கேட்காமல் வாழ்க்கை இல்லை?’ நான்’ என்ற எண்ணம் கொண்ட நம்பியார்கள் வாழ்ந்ததில்லை.

கடந்த ஒரு மாதமாய் அமைதியாய் இருந்தது தவிர்த்து, எனது இரண்டாவது பட நிலவரம் குறித்து தொடர்ந்து முகநூலிலும், இந்த ஓஹோவிலும் எழுதிவந்தாலும் போனிலும் நேரிலுமாய் நண்பர்களிடமிருந்து
நூற்றுக்கணக்கில் கேள்விகள் வருகின்றன. அதிக பட்சமாய் கேட்கப்படும் கேள்வி ‘எப்ப ஷூட்டிங். எனக்கு நடிக்க சான்ஸ் இருக்கா?தான். ‘இருக்கும்...இல்லாம எப்படி இருக்கும்?’- அப்போதைக்கு எனது பதில் இதுதான்.

படவேலைகள் எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நடந்து வருகின்றன. இனிமேல் கேள்விகளுக்கு இடமளிக்காத வண்ணம் என்ன நடக்கிறதென்று தொடர்ந்து எழுதியே தீருவேன். ஏனெனில் வேறு வழியின்றி, சில தினங்களுக்கு முன்பு, என்னையும் எழுத்தாளர்கள் பட்டியலில் நானே சேர்த்துக்கொண்டேன்.
[சினிமாக்காரன் சாலை... - 'நல்லா பாத்துக்கங்க, நானும் இப்போ ரவுடிதான்!'

Read more at: http://tamil.filmibeat.com/cinemaakkaran-saalai/cinemakkaran-salai-new-series-on-tamil-cinema-032839.html ]

மார்ச் 1 முதல் 24 மணிநேர சினிமா வேலைதான். உதவி இயக்குநர்கள், நடிக்கவிரும்புபவர்கள், மற்ற பங்களிப்பாளர்கள் யார் தொடர்புகொண்டாலும் உடனே ரெஸ்பாண்ட் பண்ணுவேன்.

முதலில் அந்த ஒரு மாத அமைதிக்கு விளக்கம் சொல்லிவிடுகிறேன்.

நமது’மூவிஃபண்டிங்’  அலுவலகத்தில் புழங்கும் நண்பர்களின் எண்ணிக்கை அதிகமானதைத் தொடர்ந்து உணவுச்செலவு அதிகமானது. எங்களது இரண்டும் சிக்கன பட்ஜெட் படங்களாச்சே? அதுகுறித்து நானும் ஜெய்லானி சாரும் பேசிக்கொண்டிருந்தபோது, வெளியே சாப்பாடு எடுப்பதற்குப் பதில் நாமே ஒரு மெஸ் துவங்கினால் என்ன என்ற யோசனையை ஜெய்லானி சார் முன்வைக்க, சிலபல ஆலோசனைகளுக்குப்பிறகு ‘வீட்டுச்சாப்பாடுhttp://veettusappadu.com/  என்ற ஒரு ’கண்ணுக்குத்தெரியாத’ மெஸ் ஒன்றை

ஆரம்பித்தோம். அதற்கு முதல் கஸ்டமர்கள் நாங்கள்தான்.முதல் வெற்றியாக எங்கள் அலுவலக உணவுச்செலவு பாதியானது. அடுத்த வெற்றி முகநூல் நண்பர்கள் ஆதரவுடன், வேலைக்கு ஆட்கள் எடுப்பதற்கு முன்பே,  அது மெல்ல சூடு பிடிக்க ஆரம்பிக்க, சிக்கன திட்டத்தின் பலிகடாவாக, கொஞ்சமும் ஈவு இரக்கமில்லாமல், கடந்த ஒரு மாதமும் என்னையே காய்கறிகள் வெட்டவைத்தார்கள்.


‘ஸ்டார்ட் கட்’ சொல்லவேண்டிய இந்தக்கைகள் கடந்த முப்பது நாளும்
‘ஸ்டார் கட் கத்தரிக்காய், ‘ஸ்டார்ட் கட் வெண்டைக்காய், ஸ்டாப் அடுத்து அவசரமா கட் வெங்காயம்’... என்று பெரும் அநீதியாக நடந்தது.

 ’எழுத்தாளர் வெங்காயம் நல்லாத்தான் வெட்றாரு’ என்று சமையல் அம்மணிகள் நக்கல் விட்டார்கள். விரல்கள் பத்தும் கதறி அழுதன. ’ஏலி ஏலி லாமா சபக்தானி’ என்று ஏசுவை அழைத்தேன். யாருக்கும் கேட்டுவிடாதபடி ‘தென்பாண்டிச்சீமையிலே’ வை மனசுக்குள் சன்னமாய்ப் பாடித்தேற்றிக்கொண்டேன்.  தினமும் குறைந்தது 20 கிலோ காய்கள். அதில் 5கிலோ வெங்காயம் வெட்டி, ஒரு ஏழை எழுத்தாளனாகிய நான் விட்ட கண்ணீருக்கு ஜெய்லானி சாரும் இந்த உலகமும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

இப்போது ‘வீட்டுச்சாப்பாடு’ நன்கு சூடு பிடித்துவிட்ட நிலையில், காய் வெட்டும் வேலையிலிருந்து அனைத்து வேலைகளுக்கும் ஊழியர்கள் நியமித்து விட்டு, ‘வீட்டுச்சாப்பாடு’ தன் சொந்தக்காலில் நிற்க ஆரம்பிக்க, பட வேலைகளைத் துவங்கிவிட்டோம்.

என்றாவது ஒருநாள், என் சொந்தக்கதையை சினிமாவாக எடுக்கும்போது, இந்த அனுபவம் நல்ல காட்சிகளாக மாறி, அது சமூகத்துக்கு குறியீடுகளுடன் சில செய்திகளைச் சொல்லும் என்று இப்போதைக்கு ஆறுதல் அடைந்துகொண்டேன்.வேற வழி?

ஒருவழியாக பீர்க்கங்காய் கட்டிங்கிலிருந்து ஃபிலிம் கட்டிங்குக்கு ஷிஃப்ட் ஆயாச்சி. ALL IS WELL.