Monday, December 22, 2014

’இப்ப திடீர்னு என்னத்துக்கு இவ்வளவு ஃபீலிங்ஸ்?’

வடிவேல் சூர்யா Surya Vadivel சில மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர். கொஞ்சம் நடிப்பு ஆர்வம். நான் ‘சிநேகாவின் காதலர்கள்’ படம் இயக்குவது அறிந்து அவ்வப்போது வாய்ப்புக்கேட்டு மிக நாசூக்காக தொடர்புகொண்டேயிருந்தார். ’வாய்ப்பு இருந்தால் சொல்கிறேன்’ என்பது தாண்டி நான் அவருக்கு எந்த உத்தரவாதமும் தரவில்லை.

இந்நிலையில் படம் துவங்கியதிலிருந்தே தொடர்ந்து பெண்டிங் விழுந்துகொண்டிருந்த ஃப்ளாஷ்பேக் காட்சிகளை வடிவேல் சூர்யா அவர்களின் சொந்த ஊரான ஈரோடு அரச்சலூரிலேயே எடுத்துவிட்டால் என்ன என்ற எண்ணத்தில் அவரை ‘அவசரத்துக்காக தொடர்புகொண்டு, அவர் தந்த வார்த்தைகளை நம்பி, ஈரோடு கிளம்பி 11,12,13 ஆகிய தேதிகளில் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டேன்.


அவரும், அவரது நண்பர்களும் மற்றும் கிராம மக்களும் காட்டிய பாசத்தையும், ஒத்த்ழைப்பையும் வார்த்தைகளில் விவரிக்கமுடியாது.


உங்களுக்கு வெறுமனே தேங்க்ஸ் மட்டும் சொல்லி தப்பிச்சிடமுடியாது சூர்யா சார்.


வயலட் கலர் சட்டையில் வடிவேல் சூர்யா சார்.




[ஃபேஸ்புக்கில் கடந்த ஆண்டில் நான் எழுதியிருந்த பதிவு இது]

ன் நண்பர்கள் எண்ணிக்கை குறித்து எப்போதுமே எனக்கு எப்போதுமே அளவு கடந்த கர்வம் உண்டு.

நான் பிறந்த நல்லமநாயக்கன்பட்டியில் துவங்கி, பத்தாம் வகுப்பு வரை படித்த சத்திரரெட்டியபட்டி, ப்ளஸ்டூ படித்த விருதுநகர் கே.வி.எஸ், ஆங்கில இலக்கியம் படித்த மதுரை அமெரிக்கன் கல்லூரி, ‘போல்டு இந்தியா’ நாளிதழில் வேலைபார்த்த மும்பை, அடுத்து சென்னையில் நான் தொடர்ந்து குப்பை கொட்டிய’ நக்கீரன்’ சத்திரியன்’ ’நெற்றிக்கண்’ ‘சினிமாடுடே’ ஸ்டார்’ ‘குமுதம்’ நான் வேலை பார்த்த சினிமா நிறுவனங்களில் சந்தித்தவர்கள் என்று எங்கும் என் நண்பர்கள் எண்ணிக்கை, ஆகப்பெரிய அண்டாவில் போட்டாலும் நிரம்பி வழியக்கூடியது.

இவர்களில் பலபேருக்கு நான் சவலைப்பிள்ளை போல. மரத்துக்கு மரம் தாவும் குட்டிக்குரங்கு போல, ஒரு இடத்தில் ஒரு உருப்படியான வேலையில் நீடித்ததில்லை என்பதால், என் நலம் குறித்து, எப்போதும்  அக்கரையுடன் விசாரித்தபடியே இருப்பார்கள்.

சற்றே சோர்ந்திருக்கும் வேலைகளில் ‘டேய் முத்து நல்லாருக்கியாடா?’ என்று விசாரிப்பு வந்தாலே போதும் நான் யானை பலம் பெற்று எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறேன்.

கடந்த ஒரு ஆண்டு பழக்கத்திலேயே அப்படிப்பட்ட என் நண்பர்களில் ஒருவராகிப்போனவர்தான் இந்த வடிவேல் சூர்யா.


’சிநேகாவின் காதலர்களில்’ நடித்த நூறுபேர்களில் ஒருவரல்ல சூர்யா.

படம் ரிலீஸாகி, மற்ற ஊர்களைப் போலவே ஈரோட்டிலும் தியேட்டர் கிடைக்காமல் போனபோது, அவர் துடித்த துடிப்பை சென்னையிலிருந்தபடியே நான் அனுபவித்தேன்.

ஒரு பொறுப்பான குடும்பத்தலைவர், ஆசிரியர், ஓவிய ஆசிரியர், ‘தினமலர்’ நிருபர், விளம்பர ஏஜெண்ட், சுயதொழில் முனைவர், சமூக சேவகர் என்று ஏகப்பட்ட முகங்களுண்டு சூர்யாவுக்கு.

 காலை எழுந்தவுடன், கைவசம் இருக்கும் வேலைகளை நினைத்து, ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்று இருப்பதை 48 மணி நேரமாக ஆக்கக்கூடாதா?’ என்று தவித்துக் கொண்டிருப்பவர். [ இந்த டிபார்ட்மெண்டுக்கு இன்சார்ஜ் யாருன்னு தெரிஞ்சா அப்பிடியே பண்ணிரலாம் ஐயா. நாங்களும் எட்டு மணி நேரத்துக்குப் பதிலா 16 மணிநேரம் தூங்கினா மாதிரி இருக்கும்]

மூவிஃபண்டிங் குறித்து நானும் ஜெய்லானிசாரும் பேசிமுடித்தவுடன், நான் முதன்முதலாக ‘இது சாத்தியமாகுமா?’ என்று இவரிடம் முதல் ஆளாக, விசாரித்தபோது, ‘ஐயா என் பங்களிப்பு எவ்வளவு வேண்டும்’ என்று பதில்கேள்வி கேட்டவர்.  அவ்வாறே ஒரு நல்ல பங்களிப்பையும் செய்திருக்கிறார்.
’இப்ப திடீர்னு சூர்யாவப்பத்தி இவ்வளவு ஃபீலிங்ஸ்?’
இன்று இந்த இனிய மனிதருக்குப் பிறந்தநாள்.
எல்லா வளங்களும் பெற்று, எனது அடுத்த படத்துக்கு தனித்தயாரிப்பாளராகும் அளவுக்கு செல்வங்களும் செழிக்க வாழ்த்துகிறேன் சூர்யா ஐயா. அவ்வ்வ்வ்வ்வ்.......

’அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா மேட்டருக்கு கனகச்சிதமா வந்து சேந்துர்றான்யா’

1 comment: