’படம் டைரக்ட் பண்ற அளவுக்கு எருமை மாடு மாதிரி வளந்துட்டீங்க, அதுக்கப்புறமும் சஸ்பென்ஸ்
வச்சி எழுதுற சல்லிப்புத்தி உங்கள விட்டுப் போகலையே பாஸ்?’
இந்த அர்த்தம் தொனிக்க சில
எதிர்வினைகளை ‘சிநேகாவின் காதலர்கள்-3’ க்குப் பிறகு நான் அதிகம் சந்திக்க நேர்ந்ததால், அதுபோன்ற
சின்னப்புள்ளத்தனமான சில காரியங்களுக்கு
முற்றுப்புள்ளி வைத்து ‘காரியம்’ செய்ய முயற்சிக்கிறேன்.
‘குமுதம்’ வேலையை விட்டபிறகு, நான் யார் யாரிடம் என்னென்ன வேலைகள் பார்த்தேன் போன்ற கச்சாத்துக்களை
பதிவிடுவது, இன்றைய தேதிக்கு,சில முகாம்களில், எகத்தாளமாகக் கருதப்படும் என்பதால், அவற்றை பத்திரமாக பரணில் மூட்டை
கட்டிவைத்துவிட்டு, நிகழ்கால சமாச்சாரங்களை மட்டும் பகிர்கிறேன்.
நான் பணம் கேட்டுப்போன
கலையுடனான சந்திப்பு, சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது.
ஆனால் கேட்ட பணம் என் கைக்கு வந்ததோ சந்திப்பு நடந்த 30 நொடிகளுக்குள். [ஒரு கணம், 5-ம் தேதி தரவேண்டிய அற்ப சம்பளத்தை 15-ம் தேதி வரை, என்
கண்ணில் ரெண்டு சொட்டு கண்ணீர் காணும் வரை இழுத்தடித்து தந்து வந்த ஒரு இயக்குனரை
நினைத்துக்கொண்டேன்] அது கைக்கு வந்தவுடன்
கொஞ்சம் தெம்பாகி அவரிடம் மனம் விட்டுப்பேச ஆரம்பித்தேன். அன்றைய சந்திப்பின் பேச்சு முழுக்க, எங்கள் இருவருக்கும் பொத்தாம்பொதுவாக
தெரிந்த நபர்களைப் பற்றியதாகவே இருந்தது.
பின்னர் எனது கசப்பான சினிமா
அனுபவங்கள் குறித்து பேச்சு திரும்பியது. கசப்பு என்பது அதை அனுபவிக்கும் தறுவாய்
மட்டும்தான். மற்றபடி வெறும்வாயாய் இருக்கையில் மெல்வதற்கு அந்த அனுபவங்கள்
என்னைப்பொறுத்தவரை இனிப்பானவையே.
எல்லாவற்றையும் பொறுமையாகக்கேட்டுவிட்டு,
அடுத்த நாள் ’சும்மா’ வந்துவிட்டுப்போகும்படி அழைத்தார் கலை. பேச்சு எங்கள் ’சத்ரியன்’ கால நினைவுகளில் துவங்கி, தமிழ்சினிமாவின் தற்போதைய குறும்பட்ஜெட் படங்கள் நிலவரம் வழியாக போய்க்கொண்டிருந்தபோது, இந்த பிரபஞ்சமே சற்றும் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது.
‘நான் இன்னைக்கு உங்கள
ஒண்ணும் சும்மா வரச்சொல்லலை. நம்ம தமிழன் திரைப்பட நிறுவனம் சார்பா ஒரு படம்
தயாரிக்கிறோம். அந்தப்படத்தை நீங்கதான் இயக்குறீங்க. முழுக்கமுழுக்க உங்கள மேல
உள்ள நம்பிக்கையில நான் தயாரிக்கிற இந்தப்படத்துக்கு ஒருத்தரைக்கூட நான் சிபாரிசு
பண்ணமாட்டேன். உங்க நடிகர்கள், உங்க தொழில்நுட்பக்கலைஞர்கள். நீங்க இந்த நிமிஷத்துல
இருந்தே உங்களுக்கான ஒரு அலுவலகத்தையும் சக கலைஞர்களையும் தேட ஆரம்பிக்கலாம்’
என்றபடி எனக்கு முன்பணம் தந்தார்.
சில உணர்வுகளை விவரிக்க
வார்த்தைகளுக்கு போதிய சக்தி இருப்பதில்லை. இதற்கு முந்திய பதிவை எழுதிவிட்டு,
அதற்கு அடுத்த நாளிலிருந்து, கலை எனக்கு படம் இயக்க வாய்ப்பளித்த மேற்படி நிகழ்வை எழுத, வார்த்தைகளுடன் நான்
முட்டிமோதிய அவஸ்தையை எப்படிச் சொல்ல? கடைசியில் வார்த்தைகளுடன் தோற்று, வழிவிட்டு
ஒதுங்கிக்கொண்டேன்.
படம் இயக்க
வாய்ப்புக்கேட்டுப் போகவில்லை. கதை சொல்லவில்லை. நிபந்தனைகள், நெருக்கடிகள் இல்லை.
என் தயாரிப்பாளர், என் தொழில்நுட்பக்கலைஞர்கள், என் நட்சத்திரங்கள்.
‘முழுக்க முழுக்க உங்கமேல
உள்ள நம்பிக்கையில’ என்ற கலையின் ஆத்மார்த்தமான
வார்த்தைகளை என் நெஞ்சத்தில் பொறித்துக்கொண்டு, ‘சிநேகாவின் காதலர்கள்’ கதையை எழுத
ஆரம்பித்தேன்.
படத்தின் இரண்டாவது
தொழில்நுட்பக்கலைஞராக, எனது 30 ஆண்டுகால நண்பர் இரா.பிரபாகர் ( http://prabahar1964.blogspot.in/ ) இசையமைப்பாளராகவும், என்னுடன்
இணைந்து திரைக்கதை எழுதுபவராகவும் இணைந்திருக்கிறார்.
திரைக்கதை பணிகள் முடிந்து,
வரும் 29, புதன் முதல், பாடல் பதிவுக்குச் செல்கிறோம்.
பாடல்களை கவிஞர், நண்பர்,
பத்திரிகையாளர் நெல்லைபாரதி எழுதுகிறார்.
ஒளிப்பதிவாளர், உட்பட மற்ற
தொழில்நுட்பக்கலைஞர்கள் தேர்வும், நாயகி சிநேகா உட்பட்ட மற்ற நட்சத்திரங்கள்
தேர்வும் விரைவில் சூடுபிடிக்க உள்ளன.
இனியும் சிநேகாவுக்காக காத்திருக்க நேரமில்லை.
ஜூன் மத்தியில், நம் படக்கலைஞர்களுடன் ஒரு
சிறு நட்புவட்டம் நடத்தி முடித்து, படப்பிடிப்பு கிளம்ப இருக்கிறோம்.
உதவி இயக்குனர்கள் வாய்ப்பு
கேட்டும் நிறைய நண்பர்கள் அணுகினார்கள். இப்போதைக்கு என்னிடம் இரண்டு பேர்
இருக்கிறார்கள். இன்னும் இருவரை முகநூல் மூலமாக இணைக்கவே உத்தேசித்திருக்கிறேன்.
இணைய நண்பர்களே இது நம்
படம். இப்படத்தில் தொழில்நுட்பக் கலைஞராகவோ, நடிகராகவோ, பாடகராகவோ பங்குபெற
விரும்பினால், உங்களைப்பற்றிய தெளிவான விபரங்களுடன், கண்டிப்பாக புகைப்படங்களுடன்
எனது மெயிலில் ohoproductionss@gmail.com
அல்லது muthuramalingam30@gmail.com-ல்
தொடர்பு கொள்ளுங்கள்.
எனக்கு நல்ல இரு உதவி
இயக்குனர்கள் கிடைக்க, என் நண்பர்களில் ஒரு பத்துப்பேராவது, தங்கள் முகநூலில்
இந்தப்பதிவை ’ஷேர்’ செய்து, எதிர்காலத்தில் என்னுடன் கணக்கை நேர்
செய்துகொள்ளும்படி கேர்ஃபுள்ளாக கேட்டுக்கொள்கிறேன்.