Saturday, May 19, 2012

நீங்கள் தொடர்புகொள்ளவிரும்பும் நபர் ஆறுபடங்கள் பார்த்து அடிபட்டுக்கிடப்பதால்…



 டந்த வாரம், எங்க வீட்டுத்திருமணம் ஒன்று வத்தலக்குண்டு அருகே நடந்ததால், ஒரு நான்கே தின கேப்பில்,’ஸ்ரீதர், ‘ஸ்ரீராமராஜ்ஜியம்’ ‘ராட்டினம்’ கண்டதும் காணாததும்’ மற்றும் இரண்டு டப்பிங் படங்கள் உட்பட 6 படங்களை அநியாயத்துக்கு மிஸ் பண்ணினேன். 

ஹைய்யோ ஹைய்யோ கல்யாணத்துக்கு போயிட்டாராம்


முன்பெல்லாம் ஒரு படத்தை மிஸ் பண்ணிவிட்டால், பார்த்த நண்பர்களுக்கு போன் போட்டு, ‘ நலம்’ விசாரிப்போம்.அவர்களும் அவர்களது தாங்கு சக்திக்கு ஏற்ற மாதிரி சலித்தபடியே, ’பரவாயில்லீங்க..நீங்க தப்பிச்சீங்க’ என்று  ஏதாவது ஒரு பதில் சொல்வார்கள்.

ஆனால்,மனிதர்கள் மிகவும் தவறானவர்களாக மாறிவிட்டார்களோ என்னவோ, சமீபத்தில் இந்தமாதிரி கேள்விகள் எதையும், யாரிடமும், கேட்க முடிவதில்லை.

இந்த வாரத்தின் அனைத்து படங்களையும் பார்க்கும் வாய்ப்பை பறிகொடுத்துவிட்டு, நேற்று சென்னை திரும்பிய எனக்கும் ஒரு நண்பருக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கேளுங்கள்.

‘’வணக்கம் வேணுஜி. ஊர்லருந்து சென்னை திரும்பிட்டேன்’’ 

‘’திரும்புங்க அதுக்கென்ன?’’

‘’இல்ல ..இந்த வாரப்படம் அத்தனையும் மிஸ் பண்ணிட்டேன். எப்பிடி இருந்ததுன்னு உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிடலாமுன்னு’’

‘’எப்பிடி இருக்கனுமோ அப்பிடித்தான் இருந்தது. அதைப்பத்தி நீங்களும் நானும் பேசி என்னாகப்போகுது?’’

‘’சில படங்கள் முன்னப்பின்னதான் இருக்கும்.அதுக்காக நீங்க எங்கிட்ட இப்பிடி பட்டும் படாம பேசுறதும், ’கண்டதும் காணாத்துமா’ இருக்கிறது அவ்வளவு நல்லாவா இருக்கு? அவ்வ்வ்வ்..’’

‘கண்டதும் காணாததும் ‘பத்தியெல்லாம் பேசுனீங்க, பழக்கவழக்கம் கூட பாக்காம உங்கள ‘கண்ட துண்டமாக்கிருவேன். நான் மறக்க நினைச்ச வாரத்தை ஞாபகப்படுத்துனதுக்காக, என்னோட ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட்ல இருந்து உங்கள நான் ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்றேன்’’

பேசிமுடித்ததும், சற்றும் இரக்கமேயின்றி, ஒரு அரக்கன் போலவே,அடுத்த நொடியில் போனைத் துண்டித்தும் விட்டார். 

இவருடனான நமது நட்பு அவ்வளவு வீக்காக இருக்கிறதா, அல்லது அவர் பார்த்த படங்கள் அவரை அவ்வளவு ஸ்ட்ராங்காக பதம் பார்த்துவிட்டதா என்று அறிந்துகொள்வதற்காக, இன்னொரு நண்பருக்கு போன் போட்டேன்.

சில நொடிகள் ஒரு ரிங்டோன் அடித்து ஓய்ந்ததும்,’’நீங்கள் தொடர்புகொள்ள விரும்பும் நபர், தொடர்ந்து ஆறு படங்கள் பார்த்து அடிபட்டுக் கிடப்பதால், அடுத்த ஒரு வாரத்துக்கு உங்களை தொடர்புகொள்ளும் நிலையில் இல்லை’’ என்று ஒரு ரெகார்ட்ட் வாய்ஸ் வந்தது. 

கூடிப்பேசிட்டாய்ங்களோ…?

நானே ஒருவாரம் சஸ்பென்சன்ல இருக்கேன் உங்களுக்கு உம்மா ஒரு கேடா?




தெலுங்கில் பவண் கல்யாணுடன், நம்ம ஸ்ருதி கமல் ஜோடி போட்டகப்பார் சிங்தான், ஆந்திராவின் லேட்டஸ்ட் சூப்பர் டூப்பர் ஹிட் படம். இன்னும் இரு வாரங்களில், வசூலில் இந்த கப்பார்தான் ஆல்டைம் ரெகார்டாக நிப்பார் என்று ஆந்திராவாலாக்கள் அடித்துச்சொல்கிறார்கள்.

ஆனால் இந்த வெற்றியை நெற்றியில் ஏற்றிக்கொள்ளாமல், தமிழிலும் ,தெலுங்கிலும் புதுப்படங்களை ஒப்புக்கொள்ளாமல்,அவ்வளவு ஏன் யாரிடமும் கதை கூட கேட்காமல்,  வெகு உறுதியாக உலாவருகிறார் ஸ்ருதி.

‘’எனது முந்தைய படங்கள் தோல்வி அடைந்தபோது என்ன மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையில்தான் இப்போதும்  இருக்கிறேன். ஒரு படம் ஹிட்டானவுடன் அட்வான்ஸ்களை வாங்கி குவித்துப்போட்டு, அரைடஜன் படங்களில் கமிட் ஆகி, ‘நான் தான் இப்போ நம்பர் ஒன்என்று சொல்லிக்கொள்ளும் மனநிலை, இப்போது மட்டுமல்ல எனக்கு எப்போதுமே வராது. எனவே புதுப்படங்களில் நடிப்பதற்கு எனக்கு எந்த அவசரமும் இல்லை.ஏற்கனவே தமிழிலும் தெலுங்கிலும் குறுகிய காலத்தில் அதிகப்படங்களில் நடித்துவிட்டோமோ என்ற எண்ணம் கூட எனக்கு அவ்வப்போது ஏற்படுகிறது.’’ என்று தடாலடியாக அறிவிக்கும் ஸ்ருதியை, கப்பார் சிங்ரிலீஸுக்கு பின்னர் தினமும் மூன்று அல்லது நான்கு தெலுங்கு  ஆஃபர்கள் தேடிவருகிறதாம்.

ஆனால் ஸ்ருதியின் மனமெங்கும் தனியாக ஒரு இசை ஆல்பம் வெளியிடுவதிலேயே லயித்திருக்கிறதாம்.

‘’ஒரு இசை ஆல்பம் தனியாக வெளியிடுவது குறித்து, சிலமாதங்கள் முன்புவரை, சற்றே நம்பிக்கையற்று இருந்தேன். இப்போது முழு நம்பிக்கை வந்துவிட்டது.மேலும் எனது இசைஞானத்தை வளர்த்துக்கொள்வதற்காக இப்போது அதிகம் தனியார் பேண்ட் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறேன். எனவே இனி ஒரு ஆல்பமாவது வெளியிட்டபிறகுதான் சினிமா’’

என்று என்னைப்போன்ற தீவிர ரசிகர்களுக்கு இனிமா தருகிறார் சின்னம்மா…கமல் வீட்டு கண்ணம்மா...

இந்த ஆல்பத்துக்கான பாடல்களை எழுதிக்கொடுப்பதோடு மட்டுமன்றி, சில பாடல்களை உலகநாயகன் மகளுக்காக பாடி, ஒத்தாசை செய்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன், அல்லது இதன்மூலமாக சிபாரிசு செய்கிறேன்.

அப்பாவுக்குப்போகவேண்டிய பேமெண்டை மட்டும் மறக்காம என்னோட அக்கவுண்டுல போட்டுருங்க ஸ்ருதி. மறந்துட மாட்டீங்களே ஜிஞ்சர் இடுப்பழகி ?


மனசைக்கொத்திங் ஓகே? ஒய் கழுத்தை சுத்திங்?



 மெரினாவின் எதிர்பாராத சுமார் வெற்றியால்,அதை தயாரித்து இயக்கிய பாண்டே ராஜை விட அதிக லாபம் அடைந்திருப்பவர் இயக்குனர் எஸ்.எழில்.

மெரினாஷூட்டிங்கிலிருந்து சிவகார்த்திகேயனை அப்படியே லவட்டிக்கொண்டு போன எழில், சுமார் 45 நாட்களில்,’மனம் கொத்திப்பறவையை முடித்துவிட்டு, சாடிலைட் ரைட்ஸும்,ஏரியாவுமாக இரண்டு மடங்கு லாபத்துக்கு ’பணம் கொத்திவிட்டதாக,’கேட்டு வயிறெரிந்த வட்டாரங்களிலிருந்து தகவல்.

மேற்படி தகவலை ஊர்ஜிதம் செய்யும் விதமாக, ஹோட்டல் ராதா பார்க் இன்னில், பிரமாண்டமான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார் எழில்.

பேசின பேமெண்ட் வந்து சேராதமாதிரியே ரொம்பவும் டல்லாக இருந்தார் சிவகார்த்திகேயன்.
மேடையில் ஒன்லி ஆண்கள் மயம். என்ன காரணத்தாலோ படத்தின் நாயகி ஆத்மியா கூட ஆப்செண்ட் ஆகியிருந்தார்.

முக்கியமான தமிழ் சினிமாக்களில் ஒன்றான,’அவள் அப்படித்தான்’ படத்தின் ஒளிப்பதிவாளர் நல்லுசாமியின் வாரிசு சூரஜை இப்படத்தின் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தி புண்ணியம் தேடிக்கொண்டார் எழில்.

கமர்ஷியலாக தாறுமாறாக ஓடிய ‘துள்ளாத மனமும் துள்ளும்’ தவிர்த்து எழிலின் படப்பட்டியல் படு சுமாரானது. அதிலும் ’பூவெல்லாம் உன் வாசம்’  தந்தபிறகும் கூட மறுபடியும் ஒரு நம்பிக்கை வைத்து அஜீத் எழிலுக்கு தந்த ‘ராஜா’ படு பேஜார் படம்.[வடிவேலுவையும் ,அஜீத்தையும் பிரித்த பெருமை இப்படத்துக்கு உண்டு.அந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த நிலைமை எனக்குண்டு ]

‘’நடுவுல ரெண்டு மூனு சுமாரான[?] படங்களை குடுத்துட்டு,அடுத்து என்ன செய்யிறது, யாரைப்போய் பாக்குறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்கிறப்பதான், என்னோட இளவயது கல்லூரி நண்பர்கள் கைகொடுக்க முன்வந்தாங்க..

இந்த நண்பர்கள் இல்லைன்னா நான் இன்னொரு படம் எடுத்திருக்க முடியாமலே போயிருப்பனோன்னு யோசிக்கிற அளவுக்கு இன்னைக்கு இண்டஸ்ட்ரியோட நிலைமை இருக்கு. ரெகுலர் புரடியூசர்கள்னு இப்ப யாருமே இல்லை. பொதுவா சினிமாவோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு.’’ என்று நண்பர்களைப்பற்றி நெகிழ்ந்தார் எழில்.

இந்த நண்பர்களின் அன்பை, நம்பிக்கையை எழில் காப்பாற்றுவாரேயானால், துவண்டுகிடக்கும் வேறுசில நல்ல இயக்குனர்களின் நண்பர்கள், தங்கள் நண்பனை நம்பி படமெடுக்க வருவார்கள்.

அதற்கான முன்னத்தி ஏராக இருப்பாரா எழில்?.

[ஸ்ரீதர், ஸ்ருதி, சித்தார்த்,மனம்கொத்திப்பறவை,எஸ்.எழில்,ஸ்ரீராமராஜ்யம்]


5 comments:

  1. சிங்கம் களமிறங்கிடிச்சி... அடுத்த வார படங்களெல்லாம் கிழி கிழி கிழிதான் :-)

    ReplyDelete
  2. ஏண்ணே எல்லாமே நல்லபடியாத்தானே போய்க்கிட்டிருக்கு..?

    ReplyDelete
  3. இந்த வாரப்படங்களுக்கு இது வரை விமர்சனம் எழுதாமல் இருப்பதை கண்டித்து உங்கள் வீட்டுமுன் தீக்குளிக்க ஒரு தொண்டர்படை காத்திருக்கிறது.

    இப்படிக்கு ஒஹோ புரடெக்ஷன்ஸ் அதி தீவிர விசிறிகள், அனைத்து இந்திய கிளை.

    ReplyDelete
  4. ஒருத்தரும் ஒழுங்கா சந்தா கட்டுறமாதிரி தெரியலையே ?

    ReplyDelete
  5. [வடிவேலுவையும் ,அஜீத்தையும் பிரித்த பெருமை இப்படத்துக்கு உண்டு.அந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த நிலைமை எனக்குண்டு ]
    can u say about this?

    ReplyDelete