Wednesday, November 30, 2011

குமுதத்தின்’மயக்கம்’

நல்ல படங்களைக்கூட மொக்கை பண்ணி எழுதுவதில் குமுதத்துக்கு எப்போதுமே ஒரு அல்ப சந்தோஷம் உண்டு.ஆனால் கடந்த வாரம் வெளியான ஒரு மொக்கை படமான ‘மயக்கம் என்ன’தலையில் தூக்கி வைத்து ஆடுகிறது குமுதம்.
படம் பார்த்தவர்களுக்கு காரணம் தெரியும். இந்த செய்தி படம் பார்க்காதவ்ர்களுக்கு மட்டுமே.போட்டோகிராபரான தனுஷ் தொடர் தோல்விகளால் நொந்து போன நிலையில் அவர் எடுத்த ஒரு யானையின் படம் (பெண் யானை என்று நினைக்கிறேன்.ஆண் யானை என்றால் குமுதத்தில் போடமாட்டார்கள்)ஒன்று குமுதம் அட்டையில் வந்து அவரது வாழ்வில் ஒளி ஏற்றுகிறது. இதை ஒட்டி பல க்ளோஸ்-அப் களில் குமுதம் அட்டையை காட்டுகிறார் செல்வா. இதில் கிறங்கிப்போன குமுதம் தரை இறங்கி வந்தது.
சும்மா ஆடுமா குமுதம் குடுமி?

சிலம்பு,நீ கிளம்பு...



பொதுவாகவே தமிழ்சினிமா இசைக்கு இது போதாத காலம் போலிருக்கிறது.புரடியூசர் தொடங்கி புரடக்‌ஷன் பாய் வரைக்கும் பாட்டெழுதுகிறார்கள்,அடுத்து அவர்களே பாடுகிறார்கள்.
சற்று முன்னர்தான் புதிய ‘மலையூர் மம்பட்டியான்’பாடல்கள் கேட்டேன்.சிம்பு பாடியிருக்காக என்று ஏற்கனவே தெரியும்.பிரஷாந்தின் அப்பா தியாகராஜனும் பாடியிருக்காக என்று பாடல் கேட்டபிறகு தான் தெரிந்து நொந்தேன்.அதுவும் எந்தப்பாட்டு? ராஜாவின் குரலிலெ கம்பீரமாக தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஆண்டதே,’காட்டுவழி போற பொண்ணே கவலைப்படாதே’
ஆடியோ ரிலீஸுக்கு சில நாட்கள் முன்பு தான் ராஜாவுக்கு ‘மம்பட்டியான்’சி டி ஐ தியாகராஜன் கொடுத்தனுப்பினாராம். தான் பாடிய பாடலை தியாகராஜன் பாடியதைக்கூட பெருந்தன்மையாக எடுத்துக்கொண்ட ராஜா,சிம்பு வின் ரீமிக்ஸைக்கேட்டு பேரதிர்ச்சி அடைந்தாராம். இவ்வளவு பாட்டை ரி-மிக்ஸ் பண்றதுன்னா நான் என்னமோ நினைச்சிருந்தேன்.மிக்ஸியில போட்டு அரைச்சி எடுப்பாங்கன்னு இப்பத்தான் தெரியுது என்று கமெண்ட் அடித்தாராம்.
வெறுமனே பாட்டைக்கேட்ட நமக்கே இவ்வளவு வெறுப்பு வருதுன்னா ...பாட்டை போட்டவருக்கு எப்பிடி இருக்கும்?
அடுத்து ராஜாவும் எஸ்.ஜானகி யும் தங்கள் குரலால் காதலில் நனைத்தெடுத்திருந்த ‘சின்னப்பொண்ணு சேல, செம்பகப்பூ போல’ கொஞ்சம் லைட்டாக ரி-மிக்ஸ் பண்ணியிருக்கிறார்கள்.
இதற்கு ‘பதிலடி’ கொடுக்கும் விதமாக, அடுத்த ஆறு மாதங்களுக்கு தியாகராஜனை எங்கு பார்த்தாலும் வணக்கம் வைப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.

டேமேஜரை மாற்றினார் அமலாபால்.....

’அம்மா’ பால் விலையை ஏற்றின தோஷமோ என்ன தெரியவில்லை அநியாயத்துக்கு செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கிறார் அமலாபால்.
லிங்குசாமியின் ‘வேட்டை’ அதர்வாவுடன்’முப்பொழுதும் உன் கற்பனைகள்’ ஆகிய இரு பட்ங்களில் நடித்து வரும் அமலாவுக்கு இவ்விரு படங்களின் துவக்கத்திலிருந்தே கால்ஷீட் பிரச்சினை.இரு பட்ங்களின் படப்பிடிப்பும் முடிவுக்கு வரும் நேரத்தில் இந்த பிரச்சினை இன்னும் அதிகமானது. லிங்கு அமலாவிடம் பேசுவதையே நிறுத்தினார். மு.உன்.க’ தயாரிப்பாளரோ கவுன்சிலுக்கு போவதாக மிரட்டினார்.
இது குறித்து தனது மேனெஜரான கிரியிடம் அமலா ஆலோசனை கேட்டபோது அவர் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தினாராம். இந்த கிரி’தான் விக்ரமுக்கும் மேனேஜர். இவரைப்பற்றி சொல்வதனால் இவர் ஒரு சரியான வுட்டாலக்கடி கிரிகிரி. வீட்டில் 3 கார்கள் வைத்திருப்பார். ஆனால் பஸ்ஸில் தான் போய் வருவார். அப்படி ஒரு ‘மாந்தோப்புக்கிளியே’ சுருளிராஜன்.நடிகர் நடிகைகளூக்கு சம்பளம் வாங்கித்தரும்போது தனது கமிஷனை எடுத்துக்கொண்டுதான் அவர்களிடம் கொடுப்பார்.
‘தெய்வத்திருமகன்’ பட கமிட்மெண்டின்போது விக்ரம் கொடுத்த பிரஷரால் இவரை மேனேஜராக ஏற்றுக்கொண்ட அமலா ‘தாண்டவம்’ படத்துக்கும் விக்ரம் தன்னைத்தான் போடுவார் என்ற ஒரே எதிர்பார்ப்பில்தான் இவ்வளவு காலமாக கிரியை கழட்டி விடாமல் இருந்தார்.இப்போது ‘தாண்டவத்திலும்’ இல்லை, லிங்குசாமியை தாண்டவம் ஆட வைத்துவிட்டார் என்ற காரணங்களை காட்டி கிரியை தூக்கி எறிந்துவிட்டார் அமலா.
இந்த தகவல் அறிந்து வேறு சில மேனேஜர்கள் அமலாவைத் துரத்திக்கொண்டிருக்கிறார்களாம். யார் பிடியிலும் மாட்டாமல் எஸ்கேப் ஆகிக்கொண்டிருக்கிறார் பால்.
 இப்ப தான் ‘பால்’ன்னாலே ஏகப்பட்ட கிராக்கிதானே?...

Tuesday, November 29, 2011

இவுக’ யங் மேஸ்ட்ரோ’ வாம்..

சினிமாவில் மார்க்கெட் ஏறும்போது சகல திசைகளிலிருந்தும் ஜால்ராக்கள் குவிந்து விடுவார்கள். அவ்வாறு இப்போது ஜால்ராக்களின் பிடியில் சிக்கி திளைத்துக்கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ்.

சுமார் 20 படங்களுக்கு இசை அமைத்திருப்பார். டைரக்டர்கள் தரும் சி டி, இவரே சொந்தமாக உல்டா செய்தது என்று இவரது பொழப்பு சுமாராக ஓடிக்கொண்டிருக்கிறது.சுமார் ஒரு மணி நேரம் செலவழித்தாலே எந்தப்பாடலை எந்த சிடி யிலிருந்து சுட்டார் என்று கண்டுபிடித்து விடமுடியும் என்கிற அளவுக்கு இவரது உல்டா பிரபலம்..

இப்படி இருக்கையில் இவர் ‘யங் மேஸ்ட்ரோ’ வாம். மேஸ்ட்ரோ’ என்றால் அது இளையராஜா தான் என்கிற போது எங்கிருந்து இந்த யங் மேஸ்ட்ரோ முளைத்தது என்பது புரியவில்லை//?

Monday, November 28, 2011

ஒண்ணுமே புரியலை...

சூர்யாவுக்கும், முருகதாஸுக்கும் ஏன் இந்த அல்ப புத்தி?

விளம்பரத்திணிப்பு என்பது தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பேரைப் பிடித்து ஆட்டும் வியாதி.பேப்பர் விளம்பரங்களிலும், போஸ்டர்களிலும் தாங்கள் நினைக்கிற பொய்யை கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி அவிழ்த்து விடுவதில் இவர்களுக்கு இணை யாரும் இல்லை
.ஒரு தியேட்டரிலும் படம் ஓடாத நிலையில் 100 வது நாள் போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள்
.
மக்கள் விவரம் தெரிந்து மனசுக்குள் கைகொட்டி சிரிக்க  ஆரம்பித்த பிறகும் இவர்களது காமெடி நிற்கிற பாடாகத்தெரியவில்லை.
.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக ஏ.ஆர். முருகதாஸும் ,நடிகர் சூர்யாவும் அடிக்கும் விளம்பரக்கூத்தை தாங்க முடியவில்லை.தமிழனின் வீரத்தை புல்லரிக்கும் வகையில் எடுத்திருந்த 7 ம் அறிவு எதோ அதன் அறிவுக்கு எட்டிய வகையில் ஓடிக்கொண்டிருக்கிறது.படம் பெரிய வெற்றியுமில்லை,தோல்வியுமில்லை.

இதை பெரிய வெற்றிப்படமாக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் சூர்யாவும்,முருகதாஸும் கடந்த  80 வருட தமிழ் சினிமா வரலாற்றை ஏலம் போட ஆரம்பித்துவிட்டனர்.
80 வருட தமிழ் சினிமா கலெக்‌ஷன் ரிப்போர்ட்டும் இவர்கள் கையில் எப்போது வந்தது என்று தெரியவில்லை. ‘சிவாஜி,எந்திரன் அதுக்கு அப்புறம் 7ம் அறீவு’தானாம்.

 படத்துக்கு 7ம் அறிவு’ என்று வைத்து விட்டு ஒரு அறிவு கூட இல்லாமல் எடுக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் தமிழ் சினிமா வரலாற்றை உங்கள் சுயலாபத்துக்காக திருத்தி எழுத ஒருநாளும் அனுமதிக்க முடியாது.
ஹரிதாஸ் துவங்கி 16 வயதினிலே வழியாக தூறல் நின்னு போச்சி,ஒரு தலைராகம்,கரகாட்டக்காரன்,என் ராசாவின் மனசிலே என்று நூற்றுக்கணக்கான வசூல் சாதனைப்படங்கள் இருக்கின்றன. இந்தப்படங்கள் வசூலித்ததில் கால்வாசி கூட 7ம் வசூல் செய்யவில்லை என்பது உங்கள் மனசாட்சிக்குத் தெரியும். அப்படியிருக்க ஏன் வரலாற்றை வம்பிழுக்கிறீர்கள்.
இவ்வளவு ஏன்  இதே உங்கள் கூட்டணியில் வந்த ‘கஜினி’ அளவுக்கு கூட இது ஹிட் இல்லை என்று உங்களுக்கு தெரியாதா?

இனி வரும் போஸ்டர் விளம்பரங்களில் இந்த வரலாற்று மோசடிகளை தொடர்ந்தீர்களெனில் ஒருவேளை மக்கள் உங்களை மறக்கலாம், மன்னிக்கலாம்.

 ஆனால் வரலாறு ஒருபோதும் உங்களை மன்னிக்காது.

சொல்லாதே யாரும் கேட்டால்....

why this kolaveri d பத்தி பேசி ஓஞ்சி தேஞ்சி போனவங்களுக்கு ஒரு உண்மையான கொலவெறியைத்தூண்டும் நியூஸ்.’3’ படப்பிடிப்பின்போது ஆரம்பத்தில் டைரக்டர் ஐஸ்வர்யாவின் வேண்டுகோளுக்கு இணங்க நெருக்கமாக நடிக்க ஆரம்பித்த தனுஷும்,ஸ்ருதியும் போகப்போக ஸ்டார்ட்...கட்..சவுண்ட்..இல்லாமலே நெருங்க ஆரம்பித்துவிட்டார்களாம்.
ஐஸ்வர்யா முறைத்துப்பார்த்தால் ‘ஒய் திஸ் கொலவெறி டி’என்று சும்மா காமெடி பண்ணி சமாளித்துவிடுகிறாராம் 3 ஐ தொட்ட தனுஷ்.
ஆரம்பத்தில் இந்த நெருக்கம் காமெடியாக இருந்தது உண்மைதான், ஆனால் இப்போது ஸ்ருதி மாறி வேறு கட்டத்துக்கு போய்விட்டது என்கிறார்கள் 3’ பட வட்டாரத்தினர். எது எப்படியோ ஊருக்கெல்லாம் ‘கொல வெறிய கொளுத்திப்போட்டவர்கள் கமல்-ரஜினி க்கும் கொளுத்திப்போடாமல் இருந்தால் சரிதான்.....

சோனியா அகர்வாலின் வாக்குமூலம்....

’மயக்கம் என்ன’ படம் ஏறத்தாழ செல்வராகவனின் சொந்த வாழ்க்கையை ஒட்டிச்செல்கிறது என்று சொல்லக்கூடிய சிலரும் இருக்கிறார்கள்.இந்தப்படத்தில், ஒரு மனைவி மனது வைத்தால் எப்படிப்பட்ட குடிகாரனையும்,துரதிருஷ்டசாலியையும் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லமுடியும் என்பதை அழுத்தம்திருத்தமாக சொல்லியிருப்பார் செல்வா..
இது தற்போதைய மனைவிக்கு அவர் வாசிக்கும் பாராட்டு் மடல் என்றால் சோனியா அகர்வாலை மறைமுகமாக தாக்குவதாகத்தானே அர்த்தம் என்கிறார்கள் அந்த சிலர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமான ஒருகதை தற்செயலாக தன்னைத்தேடி வரவே அதை கப்பென பிடித்துக்கொண்டார் சோனியா.அந்தப்படம்தான் ஒரு நடிகையின் வாக்குமூலம்’. ஆசை வார்த்தை காட்டி சீரழிக்கும் ஒருத்தரின் கதையாம் இது’.பட ரிலீஸ் சமயத்தில் செல்வராகவன் கோர்ட்டுக்குப் போனாலும் ஆச்சரியமில்லை..

Sunday, November 27, 2011

கார்த்திக்கு ஓணான் சாட்சி.....

இடத்துக்கு ஏத்தமாதிரி தங்களை மாற்றிக்கொள்வதில் நடிக-நடிகைகள் ஆனானப்பட்ட ஓணானையே தூக்கிச்சாப்பிட்டு விடுவார்கள் என்பது தெரிந்த ச்ங்கதிதான்.
ஆனால் சமீபத்தில் நடந்த தெலுங்குதிரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் பழைய ஒணான்களையெல்லாம் தூக்கிச்சாப்பிட்டுவிட்டார் தமிழ்ச்சிறுத்தை கார்த்தி.சிவக்குமாருக்கு லட்சங்களை சம்பளமாகத்த்ந்த தமிழ் சினிமா சூரியாவுக்கும் கார்த்திக்கும் கோடிகொடியாய் கொட்டிக்கொடுக்கிறது.சூர்யாவாவது கொஞ்சம் போராடி கோடிகளைத்தொட்டார்.ஆனால் கார்த்தி வெகு சுலபமாக உழைப்பே இல்லாமல் வெற்றியைத்தொட்டார்.இந்த சுலப வெற்றி கார்த்தியின் கொழுப்பை கொஞ்சம் அதிகரித்துவிட்டது போலும்.அதனால்தான் எனக்கு தெலுங்கு ரசிகர்களைத்தான் பிடிக்கும் என்று கொஞ்சமும் வெக்கமில்லாமல் பேட்டி கொடுக்கிறார். அத்தோடு நில்லாமல் அத்ற்கு விளக்கெண்ணை மாதிரி ஒரு விளக்கமும் கொடுக்கிறார்.தமிழ் ரசிகர்கள் திருட்டு வ்சிடி யில் படம் பார்க்கிறார்களாம். தெலுங்கு ரசிகர்களிடம் இந்தப்பழக்கம் கிடையாதாம்.எனவே தெலுங்கு ரசிகர்களைத்தான் பிடிக்கும் அழுத்தம்திருத்தமாக ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் முழங்குகிறார் கார்த்தி.
தெலுங்கு டப்பிங்கில் கொஞ்சம் பணம் கூடுதலாக வருகிறது என்பதற்காக இப்படி வேஷம் போட்டால் தமிழ் ரசிகர்கள் கார்த்தியை அரவணைத்த அதே வேகத்தில் வீட்டில் ரெஸ்ட்’ எடுக்கவும் வைப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
இல்லை தெலுகு ரசிகர்கர்களே நாகு ச்சால இஸ்டன் என்று தொடர்ந்து செப்புவாரேயானால்,விரைவில் ஆந்திராவுக்கே விரட்டி அடிக்க்ப்படுவார்..

Saturday, November 26, 2011

ஓஹோ புரொடக்சன்ஸ்: படமும் முடியல......மயக்கம் என்ன’- விமரிசனம்.

மயக்கம் என்ன’- விமரிசனம்.: யூத்து களை மனதில் கொண்டு செல்வராகவன் அடிக்க வந்திருக்கும் புதிய கூத்து இந்த மயக்கம் என்ன’ சரி முதலில் கதையப்பார்ப்போம்.கார்த்திக் சுப்ரமணி...

.மயக்கம் என்ன’- விமரிசனம்.

யூத்துகளை மனதில் கொண்டு செல்வராகவன் அடிக்க வந்திருக்கும் புதிய கூத்து இந்த மயக்கம் என்ன’
 சரி முதலில் கதையப்பார்ப்போம்.கார்த்திக் சுப்ரமணியமும்(தனுஷ்) அவரது பொறுப்பற்ற நண்பர்களும் ஒன்றாக வசிக்கிறார்கள். சமீபத்திய மற்ற படங்களைப்போல சகட்டுமேனிக்கு குடிக்கிறார்கள்.இந்த நண்பர்கள் பட்டியலில் செல்வராகவனின் ஸ்டேட்மெண்ட்படி ரெண்டு மொக்கை ஃபிகர்களும் அடக்கம். இந்த வீணாப்போன கூட்டணியில் கார்த்த்திக்கின் நண்பரின் காதலியாக வந்து சேருகிறார் யாமினி(ரிச்சா கங்கோபாத்தியாய).தனுஷின் நண்பருக்கு டேட்டிங்’ கொடுத்துவிட்டு இன்னொரு பக்கம் தனுஷுடன் கள்ளகாதலில் ஈடுபடுகிறார் ஆயா.இது ஒரு ரூட்டுலதான் போய்க்கொண்டிருக்கும்போது,கார்த்திக் ஆகப்பட்ட தனுஷ் கேமராவைத்தூக்கிக்கொண்டு பெரிய போட்டோகிராபர் ஆக ஆசைப்படுகிறார்.போனாப்போகட்டும் ‘அண்ணன் ஆசைப்படுறார்  அதனால தம்பி செய்றார் என்று புரிந்துகொண்டு  தனுஷை நல்ல போட்டோகிராபர் யாராவது ஒத்துக்கொண்டிருந்தால் கதை நல்ல படியாக முடிந்து சுபம் போட்டிருப்பார்கள். அனால் தனுஷை நல்ல போட்டோகிராபர் என்று ஏற்றுக்கொள்ளாமல் ஆளாளுக்கு இன்சல்ட் பண்ணுகிறார்கள்.அவர் எடுக்கிற போட்டோக்களை ‘ஆய்’ போட்டோ என்கிறார்கள்.என்னடா பய தரை ரேஞ்சுக்குப்போய் ஆய் கீய்ன்னுல்லாம் எழுதுறானேன்னு யோசிக்காதீங்க,அது அண்ணன் செல்வா, படத்துல பலமுறை ரசிச்சி யூஸ் பண்ணின் வார்த்தை.
 இந்த நேரத்தில கள்ளக்காதலி ஒரிஜினலா மாறி தனுஷை கல்யாணம் பண்ணிக்கிறாங்க. இந்த விபத்துக்கு அப்புறம் ஒரிஜினலாவே ஒரு விபத்து. அந்த விபத்து எப்பிடி ஒரு மனுஷனை கன்னாபின்னான்னு சின்னாபின்னமாக்குது அப்பிடிங்கிறதுதான் ‘மயக்கம் என்ன’ படத்தோட கதை.இதப்படிக்கிறப்பவே மயக்கம் வருதுன்னு சொல்றவங்களுக்கு பாத்த எங்களை நினைச்சிக்கிறதுதான் ஒரே ஆறுதல்

. தனுஷ சும்மா சொல்லக்கூடாது,வரவர நடிப்புல வெளுத்து
வாங்குறார்.கங்கோபாத்தியாயா தமிழுக்கு ஒரு புஷ்டியான வரவு.இதை அர்த்தபுஷ்டியுடன்’ படித்தால் நான் பொறுப்பல்ல.போட்டோகிராபி சம்பந்தமான படம்ங்கிறதால லைட்டிங்கில் சிலபல எக்ஸ்பரிமெண்ட்களில் ஈடுபட்டிருக்கிறார் ஒளீப்பதிவாளர் ராம்ஜி. கேமராமேன்’ஜி நீங்க இப்படி பண்ணலாமாஜி.?.
.பிண்ணனி இசையில் ஜீவீ பிரகாஷ் மிகவும் பிண்ணனியில் இருக்கிறார்.மெலடியாய் அவர் போட்டிருக்கும் இசை காதுக்கு கிளடியாய் கேட்கிறது.
இந்தப்படத்தின் முக்கியமான அம்சமாக நான் நினைப்பது பாடல்வரிகளைத்தான். மெய்சிலிர்க்க வைக்கும் உச்சக்கட்ட இலக்கியத்தரமான வைர வைடூரிய ,கோமேதக வரிகள் தனுஷாலும் ,செல்வராகவனாலும் எழுதப்பட்டுள்ளன.
 “அடிடா அவள மிதிடா அவள, உதைடா அவள,
 வெட்றா அவள... சரியா வரல.....
 ஒண்ணுமே புரியல,,,,,
“ஓட ஓட ஓட தூரம் குறையல,,,
,பாட பாட பாட பாட்டு முடியல,,,
,போகப்போகாப்போக ,ஒண்ணும் புரியல,,,
ஆக மொத்தம் ஒண்ணும் விளங்கல,,,

,இப்படி சகட்டுமேனிக்கு தறிகெட்டு ஓடுகின்றன பாடல்
வரிகள்,..செல்வராகவனின் இந்தப்படத்தைப்போலவே. 
அதீத புத்திசாலித்தனத்துக்கும் பைத்தியக்காரத்தனத்துக்கும் நூலிழைதான் இடைவெளி என்பார்கள். இந்தப்படத்தைப் பார்க்கும்போது அது ஏன் ஞாபகத்துக்கு வந்துதொலைக்கிறது என்று தெரியவில்லை..

Thursday, November 24, 2011

மறக்க முடியுமா தில்லானா மோகனாம்பாளை ?


அண்ணாத்தே ஆடுறார்....



     வழக்கமாக ஹீரோயின்கள்தான் ஒரு குத்தாட்டமோ குத்துப்புரோட்டோவோ போடுவார்கள். அனால் அண்ணன் ஜித்தன்’ ரமேஷ் புரட்சிகரமான முறையில் ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ படத்துக்காக சோனியா அகர்வாலுடன் சேர்ந்து குத்தாட்டம் போட இருக்கிறார். இது ஒரு சினிமா பற்றிய கதை என்பதால் ஒத்துக்கொண்டேன்.தொடர்ந்து இப்படி அழைப்பு வந்தால் ஆடமாட்டேன் என்று சற்று சீரியஸாகவே அறீக்கை வுடுகிறார் அண்ணாத்தெ. அண்ணாத்தெ ஆடுறார் ஒத்துக்கோ..ஒத்துக்கோ... அடுத்த படத்துக்கு ஆட மாட்டார் ...ஒத்திப்போ ..ஒத்திப்போ...

Monday, November 21, 2011

வித்தகன்_ விமரிசனம்

காலகாலமாக பார்த்து சலித்துப்போன கள்ளன்_போலீஸ் கதை.இதில் முதல் பாதியில் போலீஸாகவும் இரண்டாவது பாதியில் ரவுடியாகவும் பார்திபனே வருவது என்பது தயாரிப்பாளருக்கு கதையாகச்சொல்லப்பட்டபோது சுவாரசியமாக இருந்திருக்கக்கூடும்.அதன்படி செவெந்த் சானல் நாராயணன் தயாரிப்பில் வெளிவந்துள்ள வித்தகன் படம் முழுக்க ஆயிரக்கணக்கில் gun. சரி முதலில் கதைக்கு வருவோம்.வழக்கம்போல் இந்தப்படத்திலும் பார்த்திபன் ஒரு அனாதை,ஆனால் அனாதை இல்லை.குழம்ப வேண்டாம் கதையே அதுதான்.அதாவது அனாதை என்று பொய் சொல்லி போலீஸ் வேலைக்கு சேரும் nonஅனாதை.சொந்த பந்தங்களைக்காட்டி மிரட்டியே போலீஸ்காரர்களை அரசியல்வாதிக்ளும் ரவுடிகளும் இப்படி ‘அனாதையாக வேலைக்கு சேர்ந்து டிபார்ட்மெண்டில் புரட்சி செய்வது என்பது ரவுத்திரானாக வரும் பார்த்திபனின் ஐடியா.விடுவார்களா வில்லன்கள்? வாங்கின சம்பளத்துக்கும் மேலாக அவர்களது அட்டகாசம் தொடர gunஐ எடுத்து படம் முழுக்க சுட்டுக்கொண்டே இருக்கிறார்.(ரவுடிகளை சுட்ட எண்ணிக்கையில் தோசையை சுட்டிருந்தால் அதை விற்று இந்தப்படத்தின் nsc ஏரியாவை வாங்கியிருக்கலாம்) முதல் பாதியில் போலீஸ் கெட் அப்பில் சற்று கிராபிக்ஸ் தோற்றத்தில் இரண்டாவது பாதியில் அச்சு அசல் பார்த்திபனாகவே வருகிறார்.ஜோடி பூர்ணா,ஊத்துக்குளி ஃப்ரெஸ் வெண்ணையில் பிடித்து வைத்தது போல் இருக்கிறார்.முறையே5வது 12வது 19வது 27வது 46 வது 59வது சீன்களிலும் இரண்டு பாடல் காட்சிகளிலும் வந்துவிட்டுபோகிறார். எம்.எஸ்.பிரபுவும், ராம்நாத்ஷெட்டியும் கலந்துகட்டி ஒளீப்பதிவு செய்திருக்கிறார்கள். இசை சந்தேகமில்லமல் இம்சைதான். ரவுத்திரனோட பழகுன்னு பாரதியார் அப்பவே சொல்லியிருக்கார் .......இப்பிடி நடக்கும்னு உனக்கு எப்பிடியா தெரியும் ...என்று வில்லன் கேட்டதும்....தெரியும் ஏன்னா இந்தப்படத்துக்கு கதை ,திரைக்கதை ,வசனம் ,டைரக்‌ஷன் எல்லாமே நாந்தானே ...பார்த்திபன் கலாய்ப்பதும் என்று ஆங்காங்கே சுவாரஸ்யம் இருந்தாலும் கொட்டாவியின் நீளம் மட்டுமே 10 ரீல் இருக்கும்போது என்னத்தைச்சொல்றது? வித்தகன் சந்தேகமில்லாமல் செத்தgunதான்.